கூவத்தூரில் 2வது நாளாக நீடிக்கும் 144 தடை... வெறிச்சோடிக் காணப்படும் ரிசார்ட் ஏரியா
கூவத்தூரில் 144 தடை உத்தரவு இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் இன்று இரண்டாவது நாளாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது. இதனால் ரிசார்ட் ஏரியா பரபரப்பின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும், இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியால் அதிமுக-வில் குழப்பமான நிலை காணப்பட்டது. சசிகலா அணியில் இருந்து எம்எல்ஏ-க்கள், எம்பி.க்கள், அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனை தடுக்க சசிகலா தலைமையிலான மன்னார்குடி கோஷ்டி கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை சிறைத்து வைத்துள்ளது. இந்நிலையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், சசிகலா பிடியில் உள்ள எம்எல்ஏக்களை சந்திக்க புறப்பட்டனர். இதனால் அங்கு கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலெட்சுமி கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தடை உத்தரவு இன்று 2வது நாளாக நீடிக்கிறது. அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications