கொளுத்தப்பட்ட குடிசைகள்! 8 ஆண்டுகள் 144 தடை உத்தரவில் சிக்கிய கிராமம்.. தடையை நீக்க ஆட்சியர் ஆர்டர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 8 ஆண்டுகளாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. சாதிய மோதல் காரணமாக இந்த கிராமத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேசசமுத்திரம் என்ற கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று நடைபெற்ற சம்பவம்தான் அந்த கிராமத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க காரணமாக இருந்தது. இந்த கிராமத்தில் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் 2,000 குடும்பங்களாகவும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 80 குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர். இதில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமாக ஒரு அம்மன் கோயில் இருக்கிறது.

ஆண்டு தோறும் ஆடி மாதம் இந்த கோயிலில் திருவிழா நடத்தப்படும். அப்போது சப்பரத்தில் சாமி ஊர்வலம் வரும். ஆனால் 2015ம் ஆண்டு சாமிக்கு என
தேர் உருவாக்கப்பட்டது. அதை பொதுப்பாதையில் ஊர்வலமாக கொண்டுவர ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மக்கள் முயன்றிருக்கின்றனர். ஆனால் இதற்கு பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி தேர் ஊர்வலத்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிக்கிறது.
இதனை அறிந்துக்கொண்ட பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் சங்கராபுரம் காவல்நிலையம் சென்று தேர் பவனி நடந்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனையடுத்து தாசில்தார் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பான்மை சமூகத்தினர், "நாங்கள் எந்த வன்முறை சம்பவத்திலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.
இதன் பின்னர் நடந்த சம்பவத்தை எவிடன்ஸ் அமைப்பு விரிவாக கூறியுள்ளது, "அன்று மாலை சுமார் 7.00 மணியளவில் சுமார் 100 பேர் கொண்ட ஜாதி இந்து இளைஞர்கள் கற்களையும் உருட்டுக்கட்டைகளையும் எடுத்து வந்து தலித் தரப்பில் அம்மன் கோவில் பகுதியில் கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை உடைத்துள்ளனர். டிரான்ஸ்பார்மர் மீது பெரிய கற்களை கொண்டு செயலிழக்க வைக்கின்றனர்.
இவையெல்லாம் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த 40 போலீசார் முன்னிலையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் லெட்சுமி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மாலதி ஆகியோர் தேர் பவனி நடத்த அனுமதி கொடுத்திருந்ததனால் தலித்துகள் தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்பியிருந்தனர். ஆனால் இவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. எனவே தாக்குதல் தீவிரமடைந்தது. தலித் பெண்களின் சேலைகள் உருவப்பட்டிருக்கின்றன. அவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல தலித்துகளுக்கு சொந்தமான 7 இருசக்கர வாகனங்கள், 2 ஜெனரேட்டர்கள் எரிக்கப்பட்டுள்ளன. திருவிழாவுக்காக தயாரிக்கப்பட்ட புது தேர் பவனி செல்லாமலேயே முற்றிலுமாக எரித்து நாசமாக்கப்பட்டது. சாதிய ரீதியிலான வசவுகள் சரமாரியாக இருந்தன" என்று ஆய்வு நடத்தி அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் எவிடன்ஸ் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல இந்த சேசசமுத்திரம் கிராமத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
இந்த தடை உத்தரவை அகற்றக்கோரி பெரும்பான்மை சமூகத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து சுதந்திர தினமான நேற்று தடை உத்தரவு அகற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், சாதி, இன மற்றும் மத மோதல்களை கைவட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications