தமிழன் இதயம் தங்கம்யா.. 5 வருடங்களில் 145 இதய மாற்று அறுவை சிகிச்சை! சென்னை சாதனை
சென்னை: அதிகப்படியான இதய அறுவை சிகிச்சை செய்து பிறருக்கு வாழ்வளிப்பதில் சென்னை நகர மருத்துவமனைகள் நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்குகின்றன.
7 வருடங்கள் முன்பு ஹிதேந்திரன் என்ற வாலிபர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது பெற்றோர், ஹிதேந்திரனின் இதயத்தை தானம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து, இதய தானம் பற்றி தமிழகத்தில் மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் பலனாக கடந்த ஐந்து வருடங்களில் சென்னையில் 145 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. மூளைச்சாவு அடைந்தோரின் உறவினர்கள் மருத்துவமனைகளுக்கு தகவல் கொடுத்து இதயத்தை தானம் செய்தது அதிகரித்தது இதற்கு காரணம்.
மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு, சென்னை போலீசாரும் கூடிய உதவிகளை செய்துவருகிறார்கள். இதற்காக 'கிரீன் காரிடார்' என்ற திட்டத்தை செயல்படுத்திவருகின்றனர். அதன்படி, இதயம் தானமாக எடுத்துச் செல்லப்படும் வழியில், போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி இதயம் பயணிக்கும் வாகனத்தை மட்டும் செல்ல அனுமதிக்கின்றனர். இதன்மூலம் விரைவில் இதயம் மருத்துவமனையை சென்றடைந்துவிடுகிறது.
இந்தியாவிலேயே சென்னையில் அதிக அளவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற காரணம், இதுபோன்ற விழிப்புணர்வுதானாம். பாகிஸ்தான் முதல் அண்டை மாநிலம் கர்நாடகா வரை பல இதய நோயாளிகள், இதனால் பலன் அடைந்துள்ளனர். 'தமிழ்நாட்டுக்காரங்க மனசு சுத்த தங்கம்ப்பா..' என காலரை தூக்கி சொல்லிக்கொள்ள மற்றொரு செயல்பாடு இது.