மதுரைக் காமராஜர் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 15 கோடி.. வேந்தர் பதவி விலக ராமதாஸ் கோரிக்கை
மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துறை நியமிக்க 15 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் வேந்தர், இணைவேந்தர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
சென்னை: மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பி.பி.செல்லத்துரை நியமிக்கப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.
உயர்கல்வி நிறுவனத் தலைவர்கள் நியமனத்தில் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ச்சியாக நடப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வழக்கு
காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்வுக்குழு 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இரண்டாவது தேர்வுக்குழு கடந்த ஆண்டு நவம்பரில் அமைக்கப் பட்டது.

தகுதி இல்லாமல் நியமனம்
கடந்த இரு ஆண்டுகளாகத் தேர்வுக்குழு பலமுறை கூடியும் அப்போதெல்லாம் பரிசீலிக்கப்படாத பெயர் கடைசி நாளில் திணிக்கப்படுக்கிறது என்றால், தேர்வுக்குழு என்பதெல்லாம் பெயரளவுக்குத் தான் என்பதையும், தகுதியே இல்லாவிட்டாலும் ஆட்சியாளர்களிடம் அதிகமாக பணம் கொடுத்தால் எளிதாகத் துணைவேந்தராகி விடலாம் என்பது தான் செல்லத்துரையின் நியமனம் சொல்லும் செய்தியாகும்.

குற்றப் பின்னணி
துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மூவரையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேர்காணல் செய்ததாகவும், அவர்களில் செல்லத்துரையின் கல்விப்பணியை பாராட்டி அவரைத் தேர்வு செய்ததாகவும் அவரே கூறியிருக்கிறார். துணைவேந்தரை நேர்காணல் செய்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டிய ஆளுநர், தாம் தேர்வு செய்தவரின் குற்றப்பின்னணி குறித்து அறிந்து கொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது. காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக தகுதியற்ற, குற்றப்பின்னணி உள்ளவர் நியமிக்கப்பட்டதற்குப் பல்கலை.வேந்தரான ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்.

15 கோடி லஞ்சம்
துணைவேந்தராக செல்லத்துரையை நியமிக்க ஆட்சியாளர்கள் ரூ.15 கோடி கையூட்டு வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும், கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட துணைவேந்தர்கள் நியமனம் மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

வேந்தர் பதவி விலகக் கோரிக்கை
துணைவேந்தராக நியமிக்கப்பட்டது முதல் இன்று வரை செல்லத்துரை பிறப்பித்த ஆணைகள் அனைத்தும் கல்வியாளர் குழுவால் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். துணைவேந்தர் நீக்கப்பட வேண்டும். இந்த நியமனத்தில் நடந்த மோசடிக்குப் பொறுப்பேற்று பல்கலைக்கழக வேந்தர், இணைவேந்தர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications