For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி கஸ்டம்ஸ் ஆபீஸில் 15 கிலோ தங்கம் மாயம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

By Siva
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து 15 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காரில் கடத்தப்பட்ட 18.5 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்க கட்டிகள் திருச்சியில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் இருக்கும் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது. இது குறித்த வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

15 kg gold missing from Trichy customs office: 2 officials suspended

கடத்தல் தங்கத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க கடந்த 18ம் தேதி பெட்டகத்தை திறந்து பார்த்தபோது அதில் வெறும் 3.5 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 15 கிலோ தங்க கட்டிகள் மாயமாகியிருந்தது.

தங்க கட்டிகள் மாயமானது குறித்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம் சுங்கத்துறை மண்டல ஆணையர் ஜானி புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் திருச்சி வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் தங்கம் மாயமானது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் முகமது பாரூக், செந்தில் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத் துறை அதிகாரிகளுக்கும், தங்க கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் வர உள்ளதால் திருச்சி சுங்கத் துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே அலுவலகத்தில் இருந்து வைரம் திருடு போனது. ஆனால் வைரத்தை இடம் மாற்றி வைத்துவிட்டதாகக் கூறி அதை மீண்டும் ஒப்படைத்துள்ளனர். தற்போதும் அது போன்று நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

2 அதிகாரிகள்:

பெட்டக அறைக்கு 2 சாவிகள் உள்ளது. அந்த இரண்டு சாவிகளையும் அடுத்தடுத்து பயன்படுத்தினால் தான் அந்த அறையை திறக்க முடியும். அந்த சாவிகள் இரண்டு அதிகாரிகளிடம் உள்ளன. அதனால் அவர்கள் உதவி இன்றி அந்த பெட்டக அறையை திறந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பெட்டக அறைக்குள் நுழையும் அதிகாரம் 6 அதிகாரிகளுக்கு தான் உள்ளது.

ஆறு அதிகாரிகளுக்கு அதிகாரம் இருந்தாலும் சாவிகளை வைத்திருக்கும் அந்த 2 பேரும் இல்லாமல் பெட்டக அறையை திறக்க முடியாது. அதனால் அந்த 2 அதிகாரிகள் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.

திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் இருந்து அண்மையில் மாறுதலாகிச் சென்ற ஒருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம்.

English summary
Two officials have got suspended after 15 kg gold went missing from the customs office in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X