இன்று கோவை குண்டுவெடிப்பு தினம்- பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
கோவை: கோவை குண்டுவெடிப்பு தினம் மற்றும் காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று 1500 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் பலியானார்கள்.
இன்று கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம் என்பதாலும், இந்து அமைப்புகள் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சலி கூட்டம் நடத்துவார்கள் என்பதாலும் கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை குண்டு வெடிப்பு தினம் மற்றும் காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் இந்து அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அது போன்று இன்று காதலர் தினம் என்பதால் காதலர்கள் அதிகமாக கூடும் பூங்காக்கள், தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் சுற்றும் காதலர்களை பிடித்து அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து திருமணம் செய்து வைக்க உள்ளதாக ஒருசிலர் அறிவித்து உள்ளனர்.
அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications