மணல் கடத்தலை தடுத்தபோது கொல்லப்பட்ட காவலருக்கு தமிழக அரசின் வீரதீர விருது!
சென்னை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட காவலருக்கு அவரின் சேவையை கருதி காவல் துறைக்கான தமிழக முதல்வரின் வீர தீர செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி 1685 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழகமுதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
காவல் பதக்கங்கள்
இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதல்வரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்' வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு ரூ. 200/- மாதாந்நிர பதக்கப்படியாக வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் காவல் துறை தலைவர், இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மற்றும் சிறைத்துறை தலைவர் அவர்களால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.
முதல்வரின் பதக்கம்
மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் 2 அதிகாரிகள், 1 காவல் புகைப்படக் கலைஞர் மற்றும் நாய் படைப் பிரிவில் பணியாற்றும் 2 அதிகாரிகள் ஆக மொத்தம் 5 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக ‘முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்' வழங்கப்படுகிறது.
இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்க தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூபாய் 3 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூபாய் 4 ஆயிரமும் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் நிலையில் ரூபாய் 6 ஆயிரமும் வழங்கப்படும்.
இதற்கென நடைபெறவுள்ள சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வரால் பதக்கங்கள் வழங்கப்படும்.
வீரதீர விருது
மேலும், தக்கோலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய கோவிந்தராஜ் கனகராஜ், மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது சமூக விரோதிகளால் கொல்லப்பட்டார். எனவே அவரது தன்னலம் கருதாத கடமையுணர்ச்சி மிகுந்த சேவையை கருதி காவல் துறைக்கான தமிழக முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வீர தீர செயலுக்கான பரிசு தொகை ரூ.5 லட்சமும் அன்னாரின் வாரிசுதாரருக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.