நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது - எஸ்.பி. தகவல்
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சொர்ணதேவர் மகன் ரமேஷ் என்ற ராமையா (வயது30). இவர் தாழையூத்து பகுதியில் ரவுடி தனத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஆட்சியர் கருணாகரன் ஏற்று ரமேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் ரமேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் மூன்றடைப்பு தோட்டாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் மீது நெல்லை சந்திப்பு பகுதியில் கந்து வட்டி வசூல் செய்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி, ஆட்களை கடத்தி சட்ட விரோதமாக துன்புறுத்துதல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. நெல்லை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் குமார், உதவி ஆணையாளர் மாரிமுத்து, ஆகியோர் பரிந்துரையின் பேரில், கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்காக இந்த ஆண்டில் இதுவரை 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.