நாகையில் அக்கிரமம்.. 50 வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 19 வயது இளைஞன்
நாகப்பட்டனம்: நாகை மாவட்டத்தில் 50 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்கார் செய்து கொலை செய்துள்ளான் 19 வயதேயான ஒரு இளைஞன். அவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த அக்கிரமச் செயலால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மனைவி அஞ்சம்மாள் (50). தீபாவளியன்று திருப்பனையூரில் உள்ள தனது தந்தை கோவிந்தராஜுக்கு பலகாரங்கள் கொடுத்துவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, வடகரை மணக்குளத் தெருவைச் சேர்ந்த ஒருவன் அஞ்சம்மாளை வழிமறித்து பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அஞ்சம்மாளைக் கொன்று விட்டான்.
திட்டச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞனைக் கைது செய்தனர். அவனுக்கு 19 வயது என்பதால் அவனை தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
இது அந்தப் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மக்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், அஞ்சம்மாளை பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு 19 வயது என்பதால் அவனை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர். இதனால் கொலையாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்காமல் தப்பி விடுவானோ? என்ற அச்சம் உள்ளது. எனவே எங்களது கோரிக்கையை ஏற்று கொலையாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் முனுசாமி பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து கலைந்து போகச் செய்தார்.












Click it and Unblock the Notifications