அந்த நாள் ஞாபகம்... பழைய நினைவுகளை மீட்டெடுத்த எஸ்.கே.வி பள்ளி மாணவர்கள்
மதுரை: மாணவப் பருவத்தைப் போல மகிழ்ச்சியான பருவம் எதுவுமே இருக்காது. ஒரு பூவின் மலர்ச்சியைப் போல சந்தோசத்தை மட்டுமே கொண்டதுதான் பள்ளி கால நினைவுகள். அந்த நினைவுகளை அவ்வப்போது நினைத்து பார்த்தால் நம்முடைய இளமையை மீட்டெடுக்கலாம்.
அதே நினைவுகளுடன் மீண்டும் சந்தித்தால் அதுவும் கணவர், மனைவி, குழந்தைகளுடன் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் அப்படி ஒரு சந்தோச தருணம் ஸ்ரீ கந்தசாமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 92ம் ஆண்டு பேட்ச் மாணவ, மாணவிகளுக்கு கிடைத்தது.
பள்ளி பருவத்தில் சின்ன விசயத்திற்காக சேட்டை செய்து ஆசிரியரிடம் அடி வாங்கியது... நண்பனை போட்டு கொடுத்து அடிவாங்க வைத்தது... ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் டூர் போனது ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளி அறையை விட்டு வெளியே போனது என நினைத்து பார்க்க எத்தனையே நிகழ்வுகள் உண்டு.
தொண்ணூறுகளில் ஆசிரியர்களுடன் நண்பர்களாக பழகிய மாணவர்கள்தான் அதிகம் உண்டு. இன்றைக்கு எப்படியோ அன்றைக்கு ஆசிரியர்கள் சொன்னதுதான் வேதவாக்கு அதையே இன்றைக்கும் நினைவில் வைத்து கடைபிடிக்கும் மாணவர்கள் இருக்கின்றனர். அந்த மாணவர்கள் ஒருங்கிணைத்து 24 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
திருமங்கலம் டூ பாப்புநாயக்கன்பட்டி
சென்னை, மதுரை, சிவகாசி என பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த நண்பர்களுக்கு திருமங்கலத்தில் இருந்து பள்ளி உள்ள பாப்புநாயக்கன்பட்டிக்கு செல்ல வேன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு டூர் போவது போல அமர்களமாக கிளம்பியது வாகனம்.
குடும்ப சந்திப்பு
மாணவப் பருவத்தில் இருந்தவர்கள் இன்றைக்கு தந்தையாக, அன்னையாக, அலுவலகத்தில் மேலதிகாரியாக, ஆசிரியராக உயர்ந்துள்ளனர். தங்களின் பிஸியான பணிக்கு இடையேயும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பறந்து வந்தனர்.
இது என் இடம்
பள்ளிக்கு வந்த உடனேயே பழைய நினைவுகளில் மூழ்கிப் போன நண்பர்கள், தோழிகளுடன் பேசி மகிழ்ந்தனர். இங்கேதானே நான் அமர்ந்து படித்தேன் என்று கூறியதை கேட்டு ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தனர் நண்பர்களின் மனைவிகள்.
நானாக நானில்லையே
காமர்ஸ் குரூப் படித்த ராமச்சந்திரன் இப்போது பிரபல வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறார். குடும்ப சந்திப்பு வைத்திருக்கிறோம் கண்டிப்பாக வரணும் என்று போன் போட்ட உடனேயே இரண்டு நாட்கள் தன்னிலை மறந்து இருந்தாராம். ராமச்சந்திரனின் நிலையைப் பார்த்து அவரது மனைவிக்கே பயம் வந்து விட்டதாம்.
அப்பாவி ஆனந்தன்
தன்னுடைய பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஆனந்தன், கேட்காத கேள்விக்காக தான் அடிவாங்குவேன் என்று கூறினார். இருபாலர் படிக்கும் பள்ளி என்றாலும் இரண்டு காலத்தில் மூன்று முறை கூட மாணவிகளிடம் பேசியது இல்லை என்று கூறி மனைவியிடம் நல்ல பேர் வாங்கினார்.
தமிழை ருசித்த வெயில் முத்து
பணி ஓய்வு பெற்று சென்ற பின்னர் எங்களின் அழைப்பின் பேரின் சிரமம் பார்க்காமல் வந்திருந்தார் தமிழாசிரியரும் தலைமை ஆசிரியருமான கோவிந்தராஜன் ஐயா. அவரது தமிழை நாங்கள் எல்லாம் ரசிக்க, ருசித்து படித்ததாக கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார் வெயில்முத்து.
மனைவிக்கு மரியாதை
மாணவர்கள் அனைவரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ள, மனைவியையும், மகன்களையும் அழைத்து அறிமுகம் செய்து வைத்து அசத்தினார் பள்ளியின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற பாப்பையன்.
மாணவிகளின் நினைவுகள்
லட்சுமி, கவிதா, காவேரி, அனிட்டா, பரிமளா, பாலாமணி, சுந்தரி, ஜெயலட்சுமி, லட்சுமி என பட்டாம்பூச்சிகளாய் திரிந்த மாணவிகள் 24 ஆண்டுகளுக்குப் பின்னரும் இளமை மாறாமல் அதே நினைவுகளுடன் பங்கேற்று பாசத்துடன் பேசினர். சீனியர்களை பார்க்க ஜூனியர்களும் வந்தது கூடுதல் சிறப்பு.
பாசத்தோடு விருந்து
ஆள் ஆளுக்கு பேச நேரம் போனதே தெரியவில்லை குழந்தைகளுக்கு பசியெடுக்க சிறப்பான விருந்தை நண்பர்கள் பரிமாற குடும்பத்தோடு பசியாறினோம். அப்போதும் கூட சின்ன டிபன்பாக்சில் கொண்டு வந்து பகிர்ந்து உண்ட நினைவுகள் மனதில் அலையடித்தன.
அந்த நாள் ஞாபகம்
பழைய நினைவுகளை மறக்காமல் பள்ளிக்கு வந்து குடும்பத்துடன் கொண்டாடியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர் ஆசிரியர்கள். இது ஒப்பனை கலைத்த அழகு என்று கூறி கவித்துவமாய் பேசினார் தலைமை ஆசிரியர் இளமாறன்.
ஆசிரியர்களுக்கு மரியாதை
ஏணிப்படிகளாய் இருந்து ஏற்றிவிட்டு உயர்வுக்குக் காரணமான இளமாறன் ஆசிரியர், ஷேக் முகபூப், தேன்மொழி அக்கா, ஜானகி அக்கா, விவசாய ஆசிரியர் சுப்பையன், பொருளாதார ஆசிரியை ஆனந்தவள்ளி அக்கா என விடுமுறை நாளிலும் மாணவர்களின் அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
பிரிய மனமில்லையே
மாலை 5 மணி ஆன பின்னரும் விழா நீடித்தது. பழைய நினைவுகளை அசைபோட ஒருநாள் போதாதுதான். ஆனாலும் குடும்ப பணிகளை கவனிக்க வேண்டுமே, இரு ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திப்போம் என்று கூறி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணிக்கத்திற்கு நன்றி கூறிய பிரியமனமின்றி பிரிந்தனர்.
மறக்க முடியாத நினைவுகள்
பள்ளியில் படிக்கும் போது எங்க பேட்ச் மட்டும் குரூப் போட்டோ எடுக்கலையே என்று கூறி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். சந்தித்தது ஒருநாள்தான். ஆனால் அந்த சந்திப்பு ஏற்படுத்திய அதிர்வுகள் பல நாட்களுக்கு தொடரும் என்பதை யாராலும் மறக்க முடியாது... மறுக்கவும் முடியாது.