ஓ.பன்னீர் செல்வத்துக்கு குவிகிறது ஆதரவு.. 2 எம்.பிக்கள் இதுவரை ஆதரவு!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு குவிகிறது. 2 எம்.பிக்கள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவில் ஆதரவு குவிந்து வருகிறது. அவருக்கு இரண்டு அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் அவருக்குப் பின்னால் அணிவகுத்துள்ளனர். தற்போது நிர்வாகிகள் மட்டத்திலும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
பல்வேறு நிர்வாகிகளும் அவரை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கே.பி.முனுசாமி முதல் ஆளாக வந்து நேற்று இரவு ஓ.பன்னீர் செல்வத்தைப் பாராட்டி வாழ்த்தினார். தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ராஜ்யசபா எம்.பி. டாக்டர் மைத்ரேயனும் ஓ.பிஎஸ்ஸுக்கு ஆதரவாக திரும்பியுள்ளார். ஏற்கனவே சசிகலா புஷ்பாவும் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அதிமுக எம்.பிக்களில் 2 பேர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பகிரங்கமாக திரும்பியுள்ளனர்.
இதேபோல முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பல முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆதரவும் தெரிவித்துள்ளனர். நடிகர் எஸ்.வி.சேகர், கராத்தே வீரர் ஹூசேனி ஆகியோரும் முதல்வருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். முதல்வரின் துணிச்சலான பேச்சைப் பாராட்டியுள்ளனர்.
முதல்வருக்கு குவிந்து வரும் ஆதரவு மேலும் வலுப்படும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.