குழந்தையைக் கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
தென்காசி: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே குழந்தையை கடத்தி வைத்துக்கொண்டு 10 லட்சம் ரூபாய் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி அருகேயுள்ள புல்லுக்கட்டு வலசை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு இரண்டரை வயது குழந்தை உள்ளது. கடந்த 6ஆம் தேதி இரவு வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீர் என மாயமானது. ஊர் முழுவதும் தேடியும் கிடைக்காத காரணத்தால் மாயமான குழந்தை பற்றி குற்றாலம் போலீசில் சங்கர் புகார் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை தேடிவந்தனர்.இந்நிலையில் சங்கரை தொடர்புக் கொண்ட கடத்தல் கும்பல் குழந்தை உயிருடன் வேணுமெனில் 10இலட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றுகூறி போனை துண்டித்து விட்டனர்.
இதனைக் கேட்ட சங்கர் அதிர்ச்சியடைந்தார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மீண்டும் அவரைத் தொடர்புக்கொண்ட கடத்தல்காரர்கள், போலீசுக்குப் போனால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று மிரட்டிவிட்டு போனை துண்டித்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் காட்டூர் பகுதியில் ஒருஆண் குழந்தை நிற்பதைப் பார்த்தவர்கள் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக வந்த போலீசார் குழந்தையை மீட்டு சென்றனர். இதுகுறித்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தென்காசி ஏ.எஸ்.பி.அரவிந்தன்,இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் குற்றாலம் போலீசார் குழந்தையின் பெற்றோருடன் சென்று குழந்தையை மீட்டனர். பின்னர் குழந்தையை கடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணை நடத்தியதில் அவர்கள் மாரியப்பன்,கோபால் என்பதும் அவர்கள்தான் குழந்தையைக் கடத்திபணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். இதில் மாரியப்பன் சங்கரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவினரே குழந்தையை கடத்தி வைத்துக்கொண்டும் பத்து லட்சம் ரூபாய் பேரம் பேசிய சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.