தமிழகத்தில் 2 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு.. தண்டோரா மூலம் மக்களுக்குத் தகவல்
சேலம்: சேலம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை இரண்டு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அதுகுறித்து தண்டோரா போட்டு சொல்லி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடந்தது. அதில் 76.73 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று சேலம் மாவட்டத்தில் மட்டும் மின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 30 எந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமாகவே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இந்நிலையில், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கலணை ரோட்டில் உள்ள சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்னை எழலாம் என்ற சந்தேகம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஹனிஸ்ஷாப்ராவுக்கு ஏற்பட்டது.
எனவே, அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, அங்கு நாளை மறுவாக்குப்பதிவு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி எண் 37ல் 81 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அங்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு எந்திரத்தை மூட முடியவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம், நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, நாளை அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நடுவிரலில் மை
இதையடுத்து இரு வாக்குச் சாவடிகளிலும் நாளை காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே, நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால் நாளை நடைபெறும் மறுவாக்குப்பதிவில் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும்.
தற்போது மறு வாக்குப் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் தண்டோரா போட்டு மக்களுக்குத் தகவல் சொல்லி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications