பயமுறுத்திய கணிதம்... தூக்கில் தொங்கிய பிளஸ்டூ மாணவி.. சென்னையில் பரிதாபம்
சென்னை: கணிதத் தேர்வு எழுத அஞ்சிய பிளஸ்டூ மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திரிசூலம் ராணி அண்ணா நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர், திரிசூலம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஏஞ்சல் இன்பராணி (17). இவர், புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
தற்போது வருடாந்திர பொதுத் தேர்வு நடந்து வருகிறது. நேற்று கணிதத் தேர்வு நடந்தது. கணிதத்தில் சற்று பலவீனமானவர் இன்பராணி. இதனால் பயந்து கொண்டே இருந்துள்ளார். நேற்று அதிகாலையில் படிக்க எழுந்துள்ளார். அறைக்குள் போன அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மாணவி இன்பராணி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார், தற்கொலை செய்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது, இன்பராணியின் அண்ணன் இன்பராஜ், பிளஸ் டூ படித்த போது கணித பாடத்தில் தோல்வி அடைந்து விட்டார். இதனால் தானும் கணித பாடத்தில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் மாணவி இன்பராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.