திருச்சியில் காதல் திருமணம் செய்த லாரி டிரைவர் அடித்துக்கொலை- 2 பேர் கைது
திருச்சி: திருச்சி அருகே காதல் திருமணம் செய்த லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பெண்ணின் சகோதரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் புரூன்ஸ்நகர் கல்லகத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இளையராஜா. இவர் சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் லாரி டிரைவராக பணியாற்றினார்.
இளையராஜாவும் அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தியும்,17 காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. கடந்த வாரம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த ஆனந்தியின் அண்ணன் அருண், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இளையராஜாவை சந்தித்த அவர், நான் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து ஆனந்தியை அவருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் மே 30ம் தேதி திங்கட்கிழமையன்று இரவு இளையராஜா, நண்பர் பாலாஜி,அருண் ஆகியோர் கல்லகத்திலிருந்து புறப்பட்டு கல்லக்குடிக்கு சென்று மது அருந்தினர். அப்போது, அருணுடன் சிலர் சேர்ந்து, இளையராஜாவையும், பாலாஜியையும் சரமாரியாக தாக்கினர். தப்பியோடிய பாலாஜி கல்லக்குடி போலீசில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தலை நசுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இளையராஜா இறந்துக்கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லக்குடியில் இளையராஜாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
கொலையாளிகளை கைது செய்யும் வரை, இளையராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆனந்தியின் அண்ணன் அருண்குமார், அவரது நண்பர்கள் ராஜா, ஜீவா, வினோத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீ ஸார், 4 பேரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையே, ஆனந்தியின் அண்ணன் அருண்குமார், அவரது நண்பர் வினோத் ஆகியோரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.
கடந்த மே 30ம் தேதி இரவு இளையராஜாவை வரவழைத்து, தன் நண்பர்கள் 3 பேர் உதவியுடன் பீர் பாட்டிலால் தாக்கியும், கல்லைத் தூக்கிப் போட்டும் கொலை செய்துள்ளார். மேலும் 2 பேரைத் தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications