ஒட்டன்சத்திரத்தில் 2 பேரை 'சேஸிங்' செய்து மடக்கிய போலீஸ்... சுவாதி கொலை வழக்கில் தொடர்பு?
திண்டுக்கல்: இன்போசிஸ் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 2 பேரை ஒட்டன்சத்திரத்தில் போலீசார் சேஸிங் செய்து மடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதனிடையே சுவாதியின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் சந்தேக நபர்களைத் தேடி தனிப்படை போலீசர் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளில் (டி.என்.37 பதிவு எண்) ஹெல்மெட் அணிந்து நேற்று பிற்பகல் 2 பேர் சென்றனர். அப்போது அவர்களை சாதாரண உடையில் இருந்த 2 நபர்கள் சேஸிங் செய்து மடக்கி போலீஸ் ஜீப்பில் ஏற்றினர்.
ஆனால் அந்த நபர்கள் ஜீப்பில் ஏற மறுத்து வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களும் பெரும் கூட்டமாக அங்கு திரண்டுவிட்டனர். அப்போதுதான், நாங்கள் போலீசார்; கொலை வழக்கு தொடர்பாக 2 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் விலகிவிட்டனர். இந்த 2 நபர்களுக்கும் சுவாதி படுகொலையில் தொடர்பிருக்கலாம் என்பதற்காகவே போலீசார் கவனமாக பின் தொடர்ந்து வந்து மடக்கியதாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்தனர்.
அதாவது செல்போன் சிக்னல் மூலம் 2 பேரையும் தனிப் படையினர் சில நாட்களாக பின் தொடர்ந்து வந்து ஒட்டன்சத்திரத்தில் மடக்கியுள்ளனர். சுவாதி கொலை வழக்கில் ஏற்கனவே சென்னையி, திருச்சி மற்றும் கரூரில் 7 பேரை போலீசார் பிடித்துள்ளனர். சுவாதி கொலையில் இவர்களுக்கான தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications