சென்னை: கட்டிட வேலையில் மண் சரிந்து விபத்து- 2 வடமாநில தொழிலாளர்கள் சாவு
சென்னை: சென்னையில் கட்டிட வேலைக்கு குழி தோண்டிய போது மண் சரிந்து விபத்துக்குள்ளானதில் 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சென்னை சேத்துப்பட்டு, வைத்தியநாதன் கோவில் தெருவில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
இன்று மதியம் கட்டிட பணி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. கட்டிடம் கட்டுவதற்காக பெரிய பள்ளம் தோண்டி அதற்குள் இருந்தபடியே பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மேலே குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் ரோபின்மான் (32), நிக்கல் பிரகாஷ் (50) ஆகிய 2 வட மாநில தொழிலாளர்கள் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட வேலையில் மண் சரிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications