சேலம்: ப்ளஸ் 2 மாணவனுக்கு வகுப்பறையில் கத்திக்குத்து
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு மாதிரிப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவனை வகுப்பறையில் கத்தியால் குத்திவிட்டு இருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சந்தோஷ். இன்று காலை வழக்கமாக பள்ளிக்கு வந்து வகுப்பறைக்குள் அமர்ந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த 2 பேர் மறைத்து எடுத்து வந்த கத்தியால் மாணவன் சந்தோஷை குத்தினர்.
உடனடியாக இருவரும் மோட்டார் சைக்கிளியில் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த சந்தோஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 20 நாட்களில் தமிழகத்தில் பள்ளி வகுப்பறைகளில் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 2பேர் கொலை செய்யப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிலக்கோட்டை அரசு கள்ளர் பள்ளியில் மாணவர்கள் சண்டை கொலையில் முடிந்தது. இதேபோல கடந்த இருதினங்களுக்கு முன்னர் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசு பள்ளியில் சீனியர் மாணவனால் 8 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ப்ளஸ் டூ மாணவன் கத்தியால் குத்தப்பட்டுள்ளான்.