கண்மாயில் மூழ்கி சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கண்மாயில் மூழ்கி இரண்டு சகோதரிகள் உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சேத்தியை அடுத்த தாலிக்குளத்தைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி. இவருக்கு சித்ராதேவி என்ற மனைவியும் மாலதி, 17 நிவேதா, 14 பாக்கியநாதன்,9 என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர். சித்ராதேவியின் சகோதரி பாண்டிச்செல்வி தனது கணவர் சங்குபாண்டி, மகன்கள் சதீஷ்,5 மணிகண்டன்,3 ஆகியோருடன் பவசித்து வருகிறார். விடுமுறைக்காக தனது சகோதரி சித்ராதேவியின் வீட்டிற்கு வந்திருந்தார்.
நேற்று காலை சித்ராதேவி தனது குழந்தைகள் மாலதி, நிவேதா மற்றும் சகோதரி மகன் சதீஷ் ஆகியோருடன் மாரநாடு கண்மாய்க்குள் உள்ள தனது வயலுக்கு சென்றார். மதியம் 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பும் போது கண்மாய்க்குள் இறங்கி நடந்து சென்று விடலாம் என எண்ணி இறங்கியுள்ளார்.
சித்ராதேவியின் பின்னால் வந்த மாலதி, நிவேதா, சதீஷ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார்கள். சித்ராதேவியின் அலறல் கேட்டு வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மாலதி, நிவேதா ஆகியோரது உடல்களை மீட்டனர்.
சதீசின் உடலை கண்டுபிடிக்க முடியாததால் மானாமதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் வீரர்கள் நான்கு மணி நேரம் போராடி சதீசின் உடலை மீட்டனர்.
மாலதி ப்ளஸ் டூ முடித்துள்ளார். நிவேதா திருப்பாச்சேத்தி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சதீஷ் பிச்சைபிள்ளையேந்தல் தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார். நேற்று யாரும் பள்ளிக்கு போகாமல் தாயுடன் வயலுக்கு சென்று திரும்பும் போது பலியாகியுள்ளனர். திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் சுந்தர மாணிக்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தை தாசில்தார் காசி பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். சமீபத்திய மழையாலும், வைகை ஆற்றில் நீர்வரத்தாலும் மாரநாடு கண்மாய் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் நிரம்பி வரும் நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.