மணப்பாறையில் கடத்தப்பட்ட சிறுவனின் தாயை காணவில்லை - போலீசில் கணவர் புகார்
மணப்பாறையில் கடத்தப்பட்ட முன்னாள் நீதிபதியின் பேரனை போலீசார் தேடி வரும் நிலையில் குழந்தையின் தாயாரும் மாயமாகியுள்ளார்.
திருச்சி: திருச்சியில் குழந்தையை கடத்தியவர்கள் பெங்களூருவில் இருக்கும் தகவலை தொடர்ந்து ஏ.டி.ஸ்.பி நடராஜன் தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். இதனிடையே சிறுவனின் தாயும் மாயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டள்ளது.
திருச்சி, அரபிக்குளம் சந்து தெருவைச் சேர்ந்த பிரகாஷ்-முத்துலெட்சுமி தம்பதியின் இரண்டு வயது மகன், சாய் தர்ஷன். கடந்த சில தினங்களாக, குழந்தை சாய் தர்ஷன், மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் அருகே அத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனது தாத்தா ஆறுமுகம் வீட்டில் இருந்தார். ஆறுமுகம், ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி.

சிறுவன் கடத்தல்
பிரகாஷின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்பதால், நோய் தொற்று குழந்தைக்கும் ஏற்படும் என்று, தன் மனைவியின் வீட்டிற்கு சாய் தர்ஷனை அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஒரு வாரகாலமாக அத்திக்குளம் பகுதியில் உள்ள முத்துலட்சுமியின் அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளான். ஞாயிறு மாலை வீட்டின் எதிரே குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, பைக்கில் ஹெட்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர், குழந்தை சாய் தர்ஷனை கடத்திச் சென்று விட்டார்.

சிசிடிவி காட்சி
குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் குழந்தை கடத்தப்பட்டது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். முதலில் ஹெல்மெட் அணிந்த நபர் குழந்தையை கடத்தி செல்வது சிசிடிவி காமிரா காட்சியில் பதிவாகியுள்ளது. பின்னர் ஹெல்மெட் இல்லாத நபருடன் குழந்தை அமர்ந்து செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதன் மூலம் தெரிந்த நபர்தான் குழந்தையை கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் பதுங்கல்
குழந்தையை கடத்தியவர்கள் பெங்களூருவில் இருக்கும் தகவலை தொடர்ந்து ஏ.டி.ஸ்.பி நடராஜன் தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். இதனிடையே சிறுவனின் தாயும் மாயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டள்ளது.

சிறுவனின் தாய் மாயம்
குழந்தையின் தாய் முத்துலட்சுமி நேற்று கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பினார். மாலை வரை வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பிரகாஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முன்னாள் நீதிபதியின் பேரன் கடத்தப்பட்ட நிலையில் அவரது மகளும் காணமல் போன சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications