சென்னை மெட்ரோ ரயில் பாலத்தில் பைக் மோதி விபத்து... 2 பேர் பலி
சென்னை: பரங்கிமலை அருகே மெட்ரோ ரயில் பால தூணில் மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பிளஸ் டூ மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்ததே விபத்தில் உயிரிழக்க காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் சதீஷ்குமார்(23), அருண்(17) என்பதாகும். சதீஷ்குமார், சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளத்தை சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகனாவார். பி.காம் பட்டதாரியான இவர், வேலை தேடி வந்தார். அருண் அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

நண்பர்களான இருவரும் ஞாயிறன்று அதிகாலை ஒரே மோட்டார் பைக்கில் செங்கல்பட்டில் ஆட்டோ ரேஸ் நடப்பதை பார்க்க சென்றனர். இவர்களின் நண்பர்களான ராசுக்குட்டி (23), சரவணன் (23) ஆகியோரும் வேறொரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.ஆட்டோ ரேஸ் முடிந்து விட்டதாக வழியில் ஒருவர் தெரிவிக்கவே தாம்பரம் வரை சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினர்.
சதீஷ்குமார், அருண் ஆகியோர் வந்த பைக், ஆலந்தூர் கத்திப்பாரா அருகே ஆசர்கானா வளைவில் திரும்பிய போது சாலையில் சிதறிக்கிடந்த மணல், ஜல்லியில் மோட்டார் சைக்கிள் சறுக்கியது. இதில் நிலை தடுமாறிய இருவரும் மோட்டார் சைக்கிளோடு அருகில் உள்ள மெட்ரோ ரயில் பால தூணில் நேருக்கு நேராக மோதினர். இந்த பயங்கர விபத்தில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. படுகாயம் அடைந்த சதீஷ்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருண், படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய அருணை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அருண் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக சதீஷ்குமார், அருண் ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு வந்த உறவினர்களும், பெற்றோர்களும் இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.
பரங்கிமலை அருகே அதிகாலையில் நடந்த இந்த சாலை விபத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இரண்டு மோட்டார் பைக்குகள் வந்த இளைஞர்கள் ரேஸ் பைக்குகள் போல வேகமாக வந்துள்ளனர். ராசுக்குட்டி , சரவணன் ஆகியோரின் பைக் முந்திக்கொண்டு சென்றுவிட்டது. சதீஷ்குமாரும் அருணும் வந்த பைக் சறுக்கிய வேகத்தில் பாலத்தின் மீது மோதியது. இருவருமே ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. எனவேதான் மோதிய வேகத்தில் இருவரும் தலையில் பலத்த காயமடைந்தனர். இதுவே உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலந்தூர் அருகே கம்பி விழுந்து பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மெட்ரோ ரயில் பாலத்தில் மோதி இரண்டு பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications