அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கிய வழக்கு: 7 நிறுவனங்கள் மீது 20 வழக்குகள் தாக்கல்
சென்னை: பட்டா நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்திருந்ததாக 7 நிறுவனங்கள் மீது 20 வழக்குகளை மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை கிழக்கு ஒன்றியம் மற்றும் மேலூரில் பி.ஆர்.பி.,எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் பல்வேறு நிறுவனத்தினர் கிரானைட் கற்களை அரசு அனுமதியின்றி அடுக்கி வைத்திருந்தனர். ஏற்கனவே இந்த கற்களை அரசுடமையாக்க கோரி 33 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் மேலூர் தாலுகா திருவாதவூர், கீழையூர், நாவினிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் அனுமதி பெறாமல் கிரானைட் கற்களை அடுக்கி வைத்திருந்ததாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ஆஜராகி பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், பி.கே.எஸ், ராம்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் உட்பட 7 நிறுவனங்கள் மீது 20 குற்ற வழக்குகளைத் தாக்கல் செய்தார்.
பி.ஆர்.பி.,எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பழனிச்சாமி, செல்வி, சந்திரலேகா, சிவரஞ்சனி சுரேஷ்குமார் மீது 14 வழக்குகளும், பி.கே.செல்வராஜ் மீது இரு வழக்குகளும், ராம்ஸ் எக்ஸ்போர்ட்ஸ், கார்த்திகேயன், மீனாட்சி கிரானைட்ஸ், வெங்கட்ராமன் மீது தலா ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்குகளை சேர்த்து மேலூர் நீதிமன்றத்தில் 53 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணை நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலூர் தாலுகா அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஆட்சியர் சுப்ரமணியனிடம் கிரானைட் கற்கள் தொடர்பான வழக்குகளில் எதிர் தரப்பினர் தடையுத்தரவு பெற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர், ''62 வழக்குகளில் தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். சகாயம் குழு வருகை குறித்த கேள்விக்கு, ''இதுகுறித்து அரசு தான் முடிவு செய்யும்,'' என்று தெரிவித்தார்.
முறைகேடு கிரானைட் குவாரிகள் தொடர்பாக அரசு சொத்தை சேதப்படுத்தியது, வெடிபொருள் மருந்து வைத்தது, வெடிபொருள் பயன்படுத்தியதாக 92 வழக்குகள் பதிவாகின. 55 வழக்குகளில் தடையுத்தரவு இருந்ததால், விசாரணை நிலுவையில் உள்ளது. மேல் நடவடிக்கை இல்லை.
பி.ஆர்.பி.,க்கு சொந்தமான 16 பேருந்துகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, பிறகு நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை விரைந்து முடிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரானைட், கனிம வளக்கொள்ளைகளை விசாரணை நடத்த சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழுவை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து கிரானைட் மோசடி வழக்குகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications