மத்திய அரசுப் பணிகளில் 12% கூட “ஓ.பி.சி” வகுப்பினர் இல்லை!
சென்னை: மத்திய அரசு அலுவலகங்களில் ஓ.பி.சி என அழைக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக தெரிய வந்துள்ளது.
"மத்திய அரசு பணிகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்" என 20 ஆண்டுகளுக்கு முன் மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. அதன்படி மத்திய அரசு பணி நியமனங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த முரளீதரன் என்பவர் மத்திய அரசு பணிகளில் நியமிக்கப்பட்ட இதர பிற்பட்ட வகுப்பினர் எண்ணிக்கை குறித்த விவரம் கேட்டார்.
12 சதவீதத்திற்கும் குறைவு
அதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அளித்த தகவலில், "மத்திய அரசின் 40 அமைச்சகங்கள் மற்றும் சமூக நீதித்துறை உள்ளிட்ட 48 துறைகளில் 12 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஓ.பி.சி பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9000 பேர் மட்டுமே
மத்திய அரசின் ஏ, பி, சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள், 79 ஆயிரத்தில் 9,000 பேர் மட்டுமே ஓ.பி.சியைச் சேர்ந்தவர்கள். மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையில் 6,789 பேர் பணிபுரிகின்றனர்.
ஒருவர் கூட ஓபிசி கிடையாதாம்
இவர்களில் ஒருவர் கூட ஓ.பி.சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருப்பினும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வாரியாக நியமிக்கப்பட்ட ஓ.பி.சியினர் விவரம் தெரிவிக்கப்படவில்லை.
ராஷ்டிரபதி பவனில்
மேலும், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் பணியாற்றும் "ஏ" பிரிவு அதிகாரிகளில் ஒருவர் கூட ஓ.பி.சியில் இருந்து நியமிக்கப்படவில்லை.
முறையாக அமலாகவில்லை
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றுவோரில் 9 சதவீதத்தினரும், உயர் கல்வித்துறையில் பணியாற்றுவோரில் 5 சதவீதத்தினரும், ஓ.பி.சியை சேர்ந்தவர்கள். இதனால், மண்டல் கமிஷனின் பரிந்துரை முறையாக அமல்படுத்தப்படவில்லை என முரளீதரன் தெரிவித்துள்ளார்.