பிச்சைக்காரனும் பண மதிப்பிழப்பும்.. 2016ல் 1000 ரூபாய் நோட்டு 2023ல் 2000..என்ன ஒரு ஒற்றுமை!
சென்னை: பிச்சைக்காரன் படம் ரிலீஸ் ஆன 2016ஆம் ஆண்டு 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. அதே இப்போது பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ் ஆன நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் படத்திற்கும் பண மதிப்பிழப்பு அறிவிப்பிற்கும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகக் கூறி 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இவற்றை வங்கிகளில் திருப்பி ஒப்படைக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். இந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் புதிய வடிவத்தில் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.

இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் போவதற்கு ஒரே வழி ஆயிரம் ரூபாய் நோட்டையும், ஐநூறு ரூபாய் நோட்டையும் ஒழிப்பதுதான்..! என்று பிச்சைக்காரன் படத்தில் வசனம் இடம்பெற்றிருக்கும். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த அந்த படம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆனது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டன. அப்போது பட்டி தொட்டி எங்கும் அந்த வசனமும் காட்சிகளும் வைரல் ஆனது.
மே 19ஆம் தேதி 2023 இன்றைய தினம் பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ட்ரெயிலரில் கூட 2000 ரூபாய் நோட்டுக்கள் எண்ணப்படுவதை வைத்திருப்பார்கள். யோகி பாபுவும் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசியிருப்பார். க்யூ ஆர் கோட் பனியன் போட்டு பிச்சை எடுப்பார். இந்த படத்தின் காட்சிகள் புரோமோக்கள் வெளியாகி வரும் நிலையில் திடீரென 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிக் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிக் கிளைகளில் ஒரு நேரத்தில் ரூ.20,000 வரை 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும், தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2019 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, 32,910 எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கை 2020 மார்ச் 31ஆம் தேதியில் 27,398 ஆகக் குறைந்துவிட்டதாகவும் மத்திய நிதித்துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் தெரிவித்து இருந்தார்.
ஏடிஎம் மெசின்களில் கூட 2000 நோட்டுக்களை கண்ணில் பார்க்க முடியவில்லை. ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதை நிறுத்தி வைத்திருந்தது. அப்போதே ஒருவித சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்தது. என்றைக்கு இருந்தாலும் 2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மக்கள் எதிர்பார்த்தது போலவே இன்றைய தினம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு 2000 ரூபாய் நோட்டுக்களை கட்டு கட்டாக பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். எது எப்படியோ பிச்சைக்காரன் படத்திற்கும் பண மதிப்பிழப்பிற்கும் ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது.












Click it and Unblock the Notifications