அதிமுகவில் 110 எம்.எல்.ஏக்களுக்கு கல்தா?... சீட் வாங்க அலைமோதும் புதுமுகங்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 90 பேருக்கு கல்தா கொடுத்து விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து விருப்பமனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு, இன்னும், ஒரு சில மாதங்களில் வெளியாகி விடும். கடந்த முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், வரும் தேர்தலில் சீட் வாங்கி விடுவதில் குறியாக உள்ளனர். விருப்பமனு கொடுத்த கையோடு, தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும், சென்னையில் முக்கிய ஹோட்டல்களில் முகாமிட்டுள்ளனர்.
அதிமுகவில், எவருக்கு எந்த நேரத்தில் பதவி வரும், போகும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் கிடையாது. நேற்று பெரிய பதவில் இருந்தவர், தெருவில் வீசப்படுவதும், மூலையில் இருபவருக்கு அதிஷ்டம் அடிப்பதை போல பதவிகிடைப்பதும், தெருவில் வீசப்பட்டவரை மீண்டும் பதவியில் அமரவைப்பதும் சாதாரணம்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட ஐவரணி பரிந்துரைக்கும் நபருக்கு சீட் கொடுக்கப்படுவது ஒருபுறம் இருக்க சசிகலா குடும்பத்தினர் வேட்பாளர்கள் தேர்வில் முக்கிய பங்கு வகிப்பார்கள். அதேபோல கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கும், நம்பிக்கைக்கு உரியவர்களுக்கும் சீட் கொடுப்பார் ஜெயலலிதா. அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது சேனலில் ப்ளாஷ் நியூஸ் ஓடும் வரைக்கும் அவருக்கே தெரியாது.
அதிமுகவைப் பொருத்தவரை சாதாரண தொண்டர்கள் கூட சிவப்பு விளக்கு சுழல அமைச்சர்களாக வலம் வரமுடியும். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் எதிர்பாராத வகையில் பலரும் அமைச்சர்கள் ஆனது அப்படித்தான். அடுத்தடுத்து நடைபெற்ற மியூசிக்கல் சேரில் அவர்கள் நாற்காலி இழந்தது திறமையின்மையினாலும் புகார்களினாலும்தான்.
தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 29 அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். அப்போது முதல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும் என்பதால் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. அதிமுக, திமுக, பாமக, உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்று வருகின்றன.
தேர்தல் திருவிழா
அதிமுகவில் விருப்பமனு வாங்குவதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் கரைவேஷ்டி கட்டிய பலரும் ரயில்கள், பேருந்துகள் மூலம் சென்னைக்கு வருகின்றனர். வசதியான ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கும் அவர்கள் விருப்பமனு கொடுத்த கையோடு கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விடுகின்றனர்.
110 பேருக்கு கல்தா?
20 அமைச்சர்கள், 90 எம்எல்ஏக்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்களுக்கு சீட் வழங்கினால் மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என்று உளவுத்துறை, அதிமுக தலைமைக்கு அறிக்கை கொடுத்துள்ளார்களாம். அதில், ஐவரணியில் உள்ள 2 அமைச்சர்கள் மீதே குற்றச்சாட்டுகள் உள்ளதாம், அவர்களின் சொந்த தொகுதியிலேயே பிரச்னைகள் உள்ளது குறித்தும் அறிக்கை கொடுத்துள்ளார்களாம்.
அறிமுக வேட்பாளர்கள்
ஐவர் அணியினரைத் தவிர குற்றச்சாட்டுக்கு உள்ளான, உளவுத்துறை எதிர்ப்பு தெரிவித்த மற்ற அமைச்சர்களுக்கு சீட் கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதேபோல 90 எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் சீட் கிடைப்பது கடினம்தானாம். இந்த தகவல் வெளியாகி அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அறிமுக வேட்பாளர்களாக பலரும் சீட் வாங்க முயற்சி செய்து வருகிறார்களாம்.
எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
ஜெயித்ததோடு சரி பல எம்எல்ஏக்கள் தொகுதி பக்கமே செல்வதில்லை. பலர் கான்ட்ராக்ட்டில் மட்டுமே கவனம் செலுத்தி, கமிஷன் வாங்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இது பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சென்னை துறைமுகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையாவே, இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சர்கள் கமிஷன் வாங்குவதில்தான் குறியாக உள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இது பெரிய அளவில் தொண்டர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மாறும் எம்.எல்.ஏக்கள்
தேர்தல் வெற்றி வாய்ப்பு, தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதனால், உளவுத்துறையும் மாநிலம் முழுவதும் சென்று உளவுத் தகவல்களை சேகரித்தது. அதில், சென்னையிலேயே அமைச்சர்கள் வெற்றி பெறுவது கடினம் என்று தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல அமைச்சர்கள் தொகுதி மாறவும் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறார்களாம்.
சசிகலா குடும்பத்தினர் தேர்வு
2011 சட்டசபை தேர்தலில், சசிகலாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் மூலமே, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், பட்டியல் வெளியீட்டில் ஏற்பட்ட குளறுபடியை , ஜெயலலிதா லாவகமாக சமாளித்தார். வரும் தேர்தலில், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையில், முதல்வர் கவனம் தங்கள் மீது விழ வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் செல்லும் பாதையில் காத்திருந்தனர் அதற்கும் செக் வைக்கப்பட்டது.
சீட் வாங்க மும்முரம்
சட்டசபை தேர்தல் அறிவிப்பு, இன்னும், ஒரு சில மாதங்களில் வெளியாகி விடும். கடந்த முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், வரும் தேர்தலில் சீட் வாங்கி விடுவதில் குறியாக உள்ளனர். விருப்பமனு கொடுத்த கையோடு, தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும், சென்னையில் முக்கிய ஹோட்டல்களில் முகாமிட்டுள்ளனர்.
கைமாறும் லட்சங்கள்
2011 தேர்தலின்போது, சசிகலா உறவினர்கள் மூலமே, தேர்வு நடந்தது. இம்முறையும் அதுபோல் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால், அவர்களை சந்திக்கும் முயற்சியிலும் பலர் ஈடுபட்டுள்ளனர். ஒரு சீட்டுக்கு இத்தனை லட்சம் என கைமாறுவதாகவும் முக்கிய பேரங்கள் அனைத்தும் எழும்பூரில் உள்ள பிரபல ஹோட்டல்களில் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாருக்கு வாய்ப்பு?
தென்மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள் அனைவரும் எழும்பூரை சுற்றியுள்ள ஹோட்டல்களில் ஜாகை போட்டு சீட் வாங்குவதில் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ? அதிகாரப்பூர்வ சேனலில் ப்ளாஷ் ஓடிய பின்னர்தான் தெரியவரும்.