ஹெல்மெட் அணியாத தகராறு.. சென்னையில் இளைஞர் விரலை உடைக்கும் போலீசார்.. வைரலான வீடியோ
Recommended Video

சென்னை: ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞரை போலீசார் தாக்கி அவர் கை விரல்களை முறிக்கும் காட்சி வைரலாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்த விவரம் இதுதான்.

சென்னையை சேர்ந்த 21 வயது இளைஞர் பிரகாஷ் தனது தாய் மற்றும் தங்கையுடன் பைக்கில், பிரபல ஜவுளிக் கடையொன்றில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சில போலீசார் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். டூ வீலரில் மூவர் பயணித்தது மற்றும் ஹெல்மெட் அணியாதது ஆகியவற்றுக்காக பிரகாஷை போலீசார் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, பிரகாஷின் தாயை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடித்ததாகவும், இதை பார்த்து பிரகாஷ் கோபத்தில், சப்-இன்ஸ்பெக்டர் சட்டை காலரை பிடித்ததாகவும் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த போலீசார், பிரகாஷை அவரின் தாய், தங்கை கண் எதிரில் பிடித்து வைத்து அடித்துள்ளனர். அதைவிட கொடுமையாக, பிரகாஷின் கைகளை சில போலீசார் பிடித்துக்கொள்ள ஒருவர் அதை முறிக்க முயல்கிறார். விரல்களை பிடித்து உடைக்கிறார்கள். இதை பார்த்து அவரின் தாயார் கதறுகிறார். இந்த கொடூர சம்பவம் படிப்பறிவு இல்லாத ஏதோ ஒரு மாநிலத்தில் நடக்கவில்லை. சுயமரியாதை பேசிய தமிழகத்தின் தலைநகரில் நடந்துள்ளது.
இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. திருச்சியில் சமீபத்தில், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியவரை பைக்கில் துரத்திச் சென்ற போலீசார், அவர் பைக்கை எட்டி உதைத்ததில், பைக் சரிந்து, அதில் பயணித்த உஷா என்ற இளம் பெண் பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டார்.
இந்த அவல சம்பவம் மக்கள் மனதில் இருந்து மறையும் முன்பாக, சென்னையில், இதுபோன்ற ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது.












Click it and Unblock the Notifications