வளைத்து வளைத்துப் பிடிக்கப்பட்ட ஓவர் கட்டண ஆம்னி பஸ்கள்.. 22 பஸ்களுக்கு நோட்டீஸ்
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தது, பெர்மிட் இல்லாமல் இஷ்டத்திற்கு பஸ் ஓட்டியது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் டபாய்த்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 22 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வருடா வருடம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது இந்த ஆம்னி பஸ்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது. இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிப்பார்கள். பெர்மிட் இல்லாமல் ஏராளமான பஸ்களை சட்டவிரோதமாக ஓட்டி காசு பார்ப்பார்கள்.
இவர்களின் அட்டகாசம் கூடிக் கொண்டேதான் போகிறதே ஒழிய, குறைந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாகத்தான் தமிழக அரசு, அதிரடியாக பண்டிகைகக் காலங்களில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கி மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வருட தீபாவளிப் பண்டிகையின்போது ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
எழும்பூர், கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூரில் சிறப்பு குழுக்கள் சோதனை செய்தது. அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை நடந்த பரிசோதனையில் முறைகேடாக இயக்கும் ஆம்னி பஸ்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதிக கட்டணம் வசூலித்த 22 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று நடத்திய ஆய்வின் போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் ஒன்று பர்மிட்டை மீறி சென்னையில் இயக்கப்பட்டது. அந்த பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்து பஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் வரியை முறையாக செலுத்தாத ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ.76,760 வரி நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை இணை ஆணையர் விஜயராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர வேண்டும். முடிந்தால் தினசரி கூட ஸ்பெஷல் டீம் போட்டு இவர்களை ஒடுக்க வேண்டும். அப்போதுதான் அதிக கட்டணம் வசூலிப்போரின் கொட்டம் அடங்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications