துக்க நிகழ்ச்சிக்கு செல்ல பணம் தரவில்லை... மனைவி தீக்குளித்துத் தற்கொலை - கணவர் படுகாயம்
சென்னை: சென்னையில் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல கணவர் பணம் தர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது.
சென்னை, ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சிலுவைமுத்து (60). இவரது மனைவி மேரி (55). நேற்று முன்தினம் வந்தவாசியில் இவர்களது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மேரி கணவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மேரி வீட்டிற்குள் சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலுவைமுத்து மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில், சிலுவைமுத்து மீதும் தீப்பிடித்தது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், தீயை அணைத்தனர். ஆனால், படுகாயம் அடைந்த மேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீக்காயங்களோடு இருந்த சிலுவைமுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.