தேமுதிகவின் எறஞ்சி மாநாட்டுக்கு 24 கண்டிஷன்கள்... !
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் தேமுதிக நாளை நடத்தவுள்ள மாநாட்டுக்கு 24 நிபந்தனைகளைப் போட்டு அனுமதி கொடுத்துள்ளது காவல்துறை.
அந்த 24 நிபந்தனைகள் குறித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. நீண்ட நாட்களாக மாநாட்டுக்கு அனுமதி தராமல் இழுத்தடித்து வந்த காவல்துறை நேற்று மதியம்தான் அனுமதி கொடுத்தது.. கூடவே 24 நிபந்தனைகளையும் விதித்து.
உளுந்தூர்ப்பேட்டை டி.எஸ்.பி போட்டுள்ள அந்த 24 நிபந்தனைகளில் முக்கியமான சில...
அது உங்கள் பொறுப்பு
உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் மாநாடு நடத்த தீர்மானித்திருக்கும் இடமானது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பாகும்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது
இந்த மாநாட்டிற்கு திருச்சி-சென்னை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மார்க்கமிருந்து வரும் வாகனங்களை மாநாடு நடக்கும் இடத்தில் இருந்து தனித்தனியே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நிறுத்த இட வசதி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
10 மணிக்குள் முடிச்சுக்கனும்
மேடைக்கான தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். மாநாடு குறித்த நேரத்தில் தொடங்கி இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.
ஒழுங்கா கலைஞ்சு போகனும்
மாநாடு தொடங்குவது முதல் மாநாடு முடிந்து அனைத்து தொண்டர்களும் கலைந்து செல்லும் வரை அவர்களை ஒழுங்கு செய்வதும், கட்டுக்குள் வைத்திருப்பதும் உங்கள் பொறுப்பு.
தட்டி வைக்கக் கூடாது... கொடி கட்டக் கூடாது
தேசிய நெடுஞ்சாலையில் விளம்பர தட்டிகள், பலகைகள், கொடிகள் தோரணம் கண்டிப்பாக அமைக்கக்கூடாது.
எந்தச் சேதாரமும் ஏற்படக் கூடாது
அரசு மற்றும் பொது சொத்துகளுக்கு எந்த வித சேதமோ அல்லது முறைகேடோ செய்யக்கூடாது.