கூட்டமாக தற்கொலையா?- 28 திமிங்கிலங்கள் மீண்டும் கரை திரும்பி மரணம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே மணப்பாடு பகுதியில் கடலுக்குள் விடப்பட்ட திமிங்கிலங்களில் மேலும் 28 திமிங்கிலங்கள் நேற்று மாலையில் கரை திரும்பி வந்து உயிரிழந்தன.
திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் 11 ஆம் தேதி மாலை முதல் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கின. நேற்று முன்தினம் மாலை வரை 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன.

மிச்சமிருந்த 50 திமிங்கிலங்களை மீன்வளத்துறையினர், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறையினர், கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கடலுக்குள் இழுத்து சென்று விட்டனர். அவை மீண்டும் மீண்டும் கரைக்கே திரும்பி வந்தன. எனினும் அவற்றை கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது.
நேற்று அதிகாலை 6 திமிங்கிலங்கள் மீண்டும் மணப்பாடு கரையில் உயிருடன் ஒதுங்கின. இதையடுத்து மீன்வளத்துறையினரும், வனத் துறையினரும், மீனவர்களின் உதவியுடன் அவற்றை படகில் இழுத்துச் சென்று ஆழமான கடல் பகுதியில் விட்டனர். நேற்று மாலையில் 28 திமிங்கிலங்கள் கரை திரும்பி வந்து உயிரிழந்தன. இதுவரை மொத்தம் 73 திமிங்கிலங்கள் இறந்துள்ளன.
நேற்று முன்தினம் மாலை வரை 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் நேற்று வனத்துறையினர் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications