கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய பலி இல்லை என ஆட்சியர் கூறியிருந்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை அருந்தியவர்கள் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ்(46), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ்(45), கந்தன் மகன் சேகர்(61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட 43 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற வந்தவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62) மற்றும் இந்திரா (38) ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் அங்கு தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேபோன்று சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி(60) ஆகிய 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். வீரமுத்து (33), சிவா (32), அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55) ஆகிய 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75) தனகோடி (55) மற்றும் டேவிட் (28) ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே அந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் எனும் கன்னுக்குட்டியை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதை விழுப்புரம் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது.
இச்சம்பவத்தை தொடர்ந்து சேலம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் இருந்து 4 சிறப்பு மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர். 12 ஆம்புலன்ஸும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட மாநில அரசு, ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் என்பவரை நியமித்துள்ளது. அதேபோன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை கூட்டம் முடிந்ததும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 25 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications