இரண்டாவது முறையாக ஜெ. சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து!
இரண்டாவது முறையாக, ஜெயலலிதா தங்கிய சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து நடந்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
காஞ்சிபுரம்: சிறுதாவூர் கிராமத்தில் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகில் உள்ள சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த பங்களா உள்ளது. இதில் பலமுறை அவர் தனது தோழி சசிகலாவுடன் தங்கி ஓய்வெடுத்துள்ளார்.
சிறுதாவூர் பங்களாவைச் சுற்றி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சவுக்குமரங்கள் மற்றும் வயல்வெளிகள் உள்ளன. இதன் நுழைவு வாயில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஆலத்தூரை அடுத்து உள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக வயல்வெளிகள் காய்ந்துபோயுள்ளது.
இந்நிலையில், நேற்று பங்களாவில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி காய்ந்த புற்கள், செடி, கொடிகளில் பற்றி பயங்கரமாக எரிந்தது.
தீவிபத்து பற்றி சிறுசேரி, திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். திருப்போரூர் பகுதி போலீசார் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி இதே சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.