கூடங்குளம் 2வது அணு உலையில் நாளை முதல் மின் உற்பத்தி தொடக்கம்
நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் நாளை இரவு முதல் மின் உற்பத்தி தொடங்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக 48 மணி நேர அணுக் கரு பிளவு தொடர்வினை சோதனை நேற்று தொடங்கியது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் கடந்த 2013ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கியது.

2015-ம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி மீண்டும் ஆயிரம் மெகாவாட்டை எட்டியது.
இந்நிலையில் இரண்டாவது அணு உலையில் கடந்த மே 19-ந் தேதி எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது. அதன் அடுத்தகட்டமாக கடந்த மாதம் 18ந் தேதி நீராவி வெளியேற்றும் சோதனை நடைபெற்றது.
இதையடுத்து மின் உற்பத்திக்கான முக்கிய சோதனையான அணுக்கரு பிளவு தொடர் வினை சோதனைக்காக இந்திய அணு மின் கழகம், இந்திய அணு சக்தி கழகம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதி கோரப்பட்டது.
அந்த அனுமதிகள் கிடைத்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அணுக்கரு பிளவு தொடர்வினை சோதனை இரண்டாவது அணு உலையில் தொடங்கியது. 48 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications