5 அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் ஆதரவு #OPSvsSasikala
ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன் ஓபிஎஸ்ஐ சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுவரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் 134 பேரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள் என்று சசிகலாவும் தம்பித்துரையும் கூறிய நிலையில் 5 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவிற்கு எதிராக ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. அது யாராகவும் இருக்கலாம் என்றார்.

தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன் என்றும் அறிவித்தார். அவரது திடீர் புரட்சி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், இந்நாள் எம்.பிக்கள் ஒ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சசிகலாவிற்கு எதிராக கலகக்குரல் எழுப்பி வரும் சசிகலா புஷ்பா. இதனைத் தொடர்ந்து எம்.பி மைத்ரேயன், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு கூறினார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. சண்முகநாதன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுவரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications