சென்னை பெண் டாக்டர் கொலை.. நகைக்காக கொன்றதாக 3 பேர் சிக்கினர்!
சென்னை: சென்னையில் பிரபல பெண் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோகினி பிரேம்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். நகைக்காக இந்த கொலை நடந்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.
சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் பங்களா வீட்டில் வசித்து வந்தவர் பிரபல பெண் டாக்டர் ரோகினி. இவருடன் இவரது தாயார் சுபத்ரா, மகள் ரேஷ்மி ஆகியோரும் வசித்து வருகிறார்கள்.
கடந்த 7ம் தேதி அன்று இரவு 10 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட தனது வீட்டு வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் டாக்டர் ரோகினி. அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், தோட்டத்தில் அவரது உடல் கிடந்தது.
இது தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் செயல்பட்டதாகவும், அவர்கள் தான் ரோகினியின் வீட்டை அபகரிக்கும் நோக்கில் இக்கொலையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும் ரோகினியின் காதல் பிரச்சினையில் இருந்ததாகவும், அதுதொடர்பாக நடந்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்தக் கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
டாக்டர் ரோகினியின் வீட்டை சுற்றி பரந்து விரிந்த பெரிய அளவிலான தோட்டப்பகுதி உள்ளது. இங்கு இரவு நேரங்களில் அவர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். பெரும்பாலும் இரவு 10 மணிக்கு பின்னரே அவர் தோட்டத்துக்குள் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் தோட்டத்தை நன்றாக பராமரித்து வந்தார்.
கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தோட்டத்தில் புல் பதித்து அழகுபடுத்தும் பணியை அவர் மேற்கொண்டார். இதற்காக தெரிந்த ஒருவர் மூலமாக தோட்ட வேலைக்கு ஆட்களை நியமித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்த 3 வாலிபர்கள் தோட்ட வேலைக்கு வந்துள்ளனர். 5 நாட்கள் வரை இந்த பணி நடந்துள்ளது.
எனவே இவர்களில் யாராவது டாக்டர் ரோகினியை கொலை செய்திருக்கலாமோ என்கிற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டது. அந்த கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட டாக்டர் ரோகினியின் செல்போனை வைத்து துப்பு துலக்கினர். அப்போது தோட்ட வேலைக்கு வந்த வாலிபர்களே ரோகினியை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளையும், செல்போனையும் திருடிச் சென்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இதை தொடர்ந்து ரோகினியை கொலை செய்ததாக ஹரி, ராஜன் மற்றும் ஒரு வாலிபர் ஆகிய 3 பேரை போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரோகினி அணிந்திருந்த 2 தங்கச் சங்கிலி, மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் கூறுகிறார்கள்.