ஹவலா பணத்தை 'ஸ்கெட்ச் போட்டு' கொள்ளையடித்த பலே கரூர் போலீசார்.... இன்ஸ்பெக்டர் கைதால் பரபரப்பு!
கோவை: கோவை மதுக்கரை அருகே ரூ4 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கரூர் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரை அருகே கேரளாவை சேர்ந்த நகைக்கடை ஊழியர் ஒருவரின் ரூ4 கோடி பணத்தை போலீசார் உடையில் வந்த 3 பேர் கொள்ளையடித்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் நகைக் கடை ஊழியரின் ஆடம்பர கார் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸ் கும்பல்தான் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூரில் தொழிற்சாலை காவலாளி ஒருவரை மிரட்டி பணம் கேட்டதாக ஒரு புகார் வந்தது.
பெங்களூர் போன்
இந்த புகார் குறித்து விசாரிக்க கரூர் பரமத்தி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன், ஹெட் கான்ஸ்டபிள் தர்மேந்திரா ஆகியோர் உடுமலைப்பேட்டையில் முகாமிட்டிருந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு பெங்களூருவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
மதுக்கரையில் மடக்கிய போலீஸ்
அதில் ரூ4 கோடி ஹவாலா பணத்துடன் ஒருவர் வந்து கொண்டிருக்கிறார்... அவரை மதுக்கரை அருகே நீங்கள் மடக்கி கைது செய்யலாம் என துப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுக்கரை அருகே துப்பு கொடுத்த ஆசாமி கொடுத்த தகவல்களை வைத்து கேரளாவை சேர்ந்த நபரை இந்த போலீஸ் கும்பல் வழிமறித்துள்ளது.
தப்பிய கரூர் போலீஸ்
அவரிடம் இருந்த ரூ4 கோடி பணத்தை போலீஸ் கும்பல் கொள்ளையடித்துவிட்டு கரூருக்கு தப்பி வந்துள்ளது. கொள்ளை போனது ஹவாலா பணம் என்பதால் கேரளா நபர் போலீசில் அதை மறைத்து ஆடம்பர கார் மட்டுமே கொள்ளை போனதாக கூறியிருக்கிறார்.
தொடர்பு அம்பலம்
இது தொடர்பாக மதுக்கரை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் இக்கொள்ளையில் கரூர் போலீஸ் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் கைது
இத்தகவல் கிடைத்தவுடன் போலீஸ் கும்பல் உடனே தலைமறைவானது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை மதுக்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான சரவணன் மற்றும் தர்மேந்திராவை தற்போது போலீசார் தேடி வருகின்றனர். ரூ4 கோடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.