சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையை அடுத்த சங்கரக்கோட்டை பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஐந்து பேர் மரணமடைந்து விட்டனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பலியாகி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதலிபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடிக்கடி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
எனினும் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சாத்தூர் அருகே நாராணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. சங்கரக்கோட்டை என்னுமிடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது உராய்வு ஏற்பட்டது. அப்போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உடல் உயிர் கருகி உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடி விபத்து ஏற்பட்ட அறையில் இருந்து 3 பேர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த ஐந்து பேரும் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. ஒரே அறையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக அதன் உரிமையாளரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணி தொடங்கி 10 நாட்கள் மட்டுமே ஆகிறது. இந்த நிலையில் முதல் விபத்தாக இது பதிவாகியுள்ளது.