நெல்லை, திண்டுக்கல், பழனி தேமுதிக நிர்வாகிகள் நீக்கம் - விஜயகாந்த் அதிரடி
சென்னை: திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் பழனி தேமுதிக நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தமிழக கட்சிகள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. முக்கியப் பொறுப்பிலிருந்து நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்டு வருகின்றனர்.
அதிமுகவில் சிலரது தலைகள் உருண்டன, சில அமைச்சர்களும் நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து திமுகவில் களையெடுப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது தேமுதிக நிர்வாகிகள் மூன்று பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக துணை செயலாளராக செயல்பட்டு வந்த எஸ்.ஜெயச்சந்திரன், அவர் வகித்து வந்த கழக பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், பழனி நகர கழக செயலாளராக செயல்பட்டு வந்த டி.வெங்கட சுப்பிரமணி, அவர் வகித்து வந்த கழக பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.