என்னா பல்டி... போன வேகத்தில் திமுகவிலிருந்து தாவி மீண்டும் தேமுதிகவுக்கே திரும்பிய 3 நிர்வாகிகள்!
சென்னை: தேமுதிக கட்சியில் இருந்து பிரிந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த மூன்று முக்கிய நிர்வாகிகள் மீண்டும் தேமுதிகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர்.
கூட்டணி குறித்த விஜயகாந்த்தின் தவறான முடிவால் சட்டசபை தேர்தலில் தேமுதிக தோல்வியை சந்தித்ததாக அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் புலம்ப தொடங்கினர். இதையடுத்து பல நிர்வாகிகள் சமீபத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திமுக கையோடு, திரும்பவும் மூன்று முக்கிய பிரமுகர்கள் தேமுதிக திரும்பியுள்ளனர். ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் லோகநாதன், தென் சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் வேணு மற்றும் கடலூர் கவுன்சிலர் மகாதேவன் ஆகிய மூவரும் திமுகவில் இருந்து இன்று மீண்டும் தேமுதிகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்சியின் பொருளாளர் இளங்கோவன், நிர்வாகி பாரத்தசாரதி முன்னிலையில் கோயம்பேட்டிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
திமுகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்கள் திரும்பவும் தாய் கழகத்தோடு தங்களை இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.