பெண்ணிடம் கிண்டல்.. திருவல்லிக்கேணியில் இரு தரப்பினர் மோதல்.. 3 பேர் காயம்
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில், பெண்ணிடம் கிண்டல் செய்தது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே திடீர் மோதல் மூண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
திருவல்லிக்கேணி சுபத்ராலால் தெருவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள அப்துல்லா குறுக்குத் தெருவில் இரவில் தனியாக நடந்து போயுள்ளார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் ஒரு நபர் அப்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தனது வீட்டுக்கு விரைந்து வந்து தனது மகன் முகேஷிடம் இதுகுறித்து கூறியுள்ளார். கோபமடைந்த முகேஷ், சிலருடன் அந்தத் தெருவுக்குச் சென்று, தனது தாயை சீண்டியதாக கூறப்பட்ட சாதிக் அலி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாதிக் அலிக்கு ஆதரவாக சிலர் திரண்டு வந்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது.
இதில் முகேஷ், சாதிக் அலி மற்றும் ஷர்மிளா பேகம் ஆகியோர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து அமைதிப்படுத்தினர். முகேஷ், சாதிக் அலி மற்றும் முகேஷின் தாயார் கொடுத்த புகார்களைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.