சென்னையில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி - 3 பேர் படுகாயம்
சென்னை: சென்னை கிண்டி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதியதில் மூன்று மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியான மாணவிகளின் பெயர் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்திரி என்பது தெரியவந்துள்ளது.
தண்ணீர் லாரி வேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தண்ணீர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலம் முதல் சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.