வேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை.. மகன் தப்பினார்... மக்கள் அதிர்ச்சி
வேலூர் அருகே மின்வாரிய ஊழியர், மனைவி மற்றும் மகளுடன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது. மகன் மட்டும் உயிர் தப்பினார்.
திருப்பத்தூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மின்வாரிய ஊழியர் , மனைவி மற்றும் மகளுடன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரது மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் தமிழரசன், என்ற மகனும் சுகன்யாஎன்ற மகளும் உள்ளனர். வீட்டின் அருகே மோகன் 2 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

இவற்றில் ஒரு கடையில் அப்பகுதியில் வசித்து வரும் ஜான்சி என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மோகன் குடும்பத்தினர் யாரும் வெளியே வராததால் ஜான்சி அவர்களின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.
அப்போது கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்த அவர், மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சுகன்யா ஆகியோர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்குவந்த போலீசார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மோகனின் மகன் தமிழரசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் பார்த்த போலீசார் அவர்கள் கழுத்தை அறுத்தும் தலையில் கல்லைப்போட்டும் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழரசனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் டிப்ளமோ படித்துள்ளார். கொல்லப்பட்ட சுகன்யா இன்ஜினியரிங் படித்துள்ளார். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டிருப்பது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அங்கு பதட்டம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications