பொள்ளாச்சியில் அரசு பேருந்து மீது மோதிய வேன்- 3 கேரள வியாபாரிகள் பரிதாப பலி
கொழிஞ்சாம்பாறை: பொள்ளாச்சியில் வேன் ஒன்றின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 வியாபாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் என்தோஸ். ஆலப்புழையை சேர்ந்தவர்கள் ஐபின், சுனில்குமார். இதில் என்தோஸ், ஐபின் ஆகியோர் கொழிஞ்சாம்பாறை வண்ணாங்கடையில் பல ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இஞ்சி பயிரிட்டு வியாபாரம் செய்து வந்தனர்.

சுனில்குமார் அதே பகுதியில் தென்னந்தோப்பில் கள் வியாபாரம் செய்து வந்தார். இவர்களது நண்பர்கள் பாபு, ஜார்ஜ். நேற்று இரவு 8 மணிக்கு 5 பேரும் பொள்ளாச்சிக்கு வேனில் புறப்பட்டனர். மூங்கில்மடை சினிமா தியேட்டர் அருகே வந்தபோது பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேனும், பஸ்சும் நேருக்குநேர் மோதின.
இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய 5 பேரும் அலறி சத்தம் போட்டனர். பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் காரில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து கொழிஞ்சாம்பாறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் என்தோஸ், ஐபின், சுனில்குமார் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். பாபு, ஜார்ஜ் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்கள் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications