கடலூர் அருகே திருவிழாவுக்கு சென்ற 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கிய பரிதாபம்
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எடைசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் வெற்றிவேல்(10). அதே பகுதியை சேர்ந்த கார்த்தி(10), குமரவேல்(10) ஆகியோரும் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று பள்ளி முடிந்ததும் மாலையில் வீடு திரும்பிய அவர்கள், அப்பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால், மாணவர்கள் 3 பேரும் இரவு வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அங்குள்ள ஏரியில் வெற்றிவேல், கார்த்தி, குமரவேல் ஆகிய 3 பேரின் சடலங்கள் மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குளத்தில் மூழ்கி பலியான 3 மாணவர்களின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில் விழாவுக்கு செல்வதாக சென்ற மாணவர்கள் அங்குள்ள ஏரியில் குளித்ததாகவும், அந்த சமயத்தில் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் சகதியில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரே கிராமத்தில் 3 மாணவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications