ஓட்டு எண்ணும் இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சென்னையில் ஓட்டு எண்ணும் இடங்களில் 24 மணி நேர 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 500 துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டத்தேர்தல் நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு அமைதியான முறையில் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆயினும் 6 மணிக்கு முன்னதாக வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப் பட்டது. எனவே சுமார் 7 மணி வரை வாக்காளர்கள் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து வாக்குச்சாவடிகளில் இருந்து, ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு தக்க போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
ஓட்டு எண்ணும் இடங்கள்:
வடசென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணப்படும், சென்னை ராணிமேரி கல்லூரிக்கும், மத்திய சென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரிக்கும், தென் சென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடமான அண்ணாபல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
சட்டசபைத் தொகுதி வாரியாக...
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
3 அடுக்கு பாதுகாப்பு...
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை ராணுவத்தினர்...
முதல் அடுக்கில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு, எந்திர துப்பாக்கியுடன் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் காவல் உள்ளனர்.
கண்காணிப்பு கேமரா...
வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் உள்ள.மானிட்டரில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடையற்ற மின்சாரம்...
மின்னணு எந்திரங்கள் உள்ள அறையில் அதிக ஒளி வெள்ளத்தை கக்கும் ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட ஏதுவாக ஜெனரேட்டர் வசதி அமைக்கப் பட்டுள்ளது.
அடுத்தடுத்த அடுக்குகளில்...
2-வது அடுக்கில் எந்திர துப்பாக்கியுடன் தமிழக ஆயுதப்படை போலீசாரும், 3-வது அடுக்கில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
தீயணைப்பு வீரர்களும்....
ஓட்டு எண்ணும் இடங்களில் ஒரு துணை கமிஷனர் தலைமையில் 500 போலீசார், 24 மணி நேரமும் 3 சிப்டுகளாக காவல் காக்கின்றனர். தீயணைக்கும் வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.
கோழி அடை காப்பது போல....
மொத்தத்தில், ஓட்டுப்பதிவு எந்திரங்களை கோழி, முட்டையை அடைகாப்பது போல, வாக்கு எண்ணப்படும் நாளான மே மாதம் 16-ந்தேதி வரை போலீசார் காவல் காப்பார்கள், என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.