தூத்துக்குடி அருகே படகு கவிழ்ந்து 3 பேர் மாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து லட்சத்தீவிற்கு கட்டுமானப்பொருட்கள் ஏற்றிச்சென்ற தோணி நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தில் மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 3தொழிலாளர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(தோணி தண்டல்), பாத்திமாநகரை சேர்ந்த மரியான், இனிகோ நகர் பகுதியை சேர்ந்த ஒர்னலிஸ் மற்றும் சதிஷ், கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த கெனிஸ் ஆகியோர் மங்களுரை சேர்ந்த ரபீக் என்பவருக்கு சொந்தமான சரக்கு தோணியில் கடந்த 24ஆம் தேதியன்று கல்,மணல் ஆகியவற்றை ஏற்றி கொண்டு லடசத்தீவு அருகில் உள்ள ஆந்திரோஷ் தீவிற்கு சென்றனர்.
இவர்கள் சென்ற தோணி கடந்த 25ஆம் தேதி ஆந்திரோஷ் தீவில் இருந்து 7கடல்மைல் தொலைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக தோணி நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் கடலில் தத்தளித்த ஒர்னலிஸ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களால் காப்பற்றப்பட்டனர். இதனையடுத்து இருவரும் லட்சத்தீவிற்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் தந்தை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தோணி கவிழ்ந்த விபத்தில் நடுக்கடலில் காணாமல் போன செல்வம், மரியான் மற்றும் கெனிஸ் ஆகியோரை தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மாயமான தோணித்தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினரும், எச்.எம்.எஸ் சங்கத்தலைவருமான சத்யா மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications