ஸ்டான்லி மருத்துவமனையில் 3 வயது ஆண் குழந்தை மாயம்.. போலீஸ் தேடுதல் வேட்டை
சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தை மாயமாகியுள்ளது. இதுகுறித்து புகாரை தாய் உசேனா பானு போலீசாரிடம் அளித்துள்ளார்.
சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 3 வயது ஆண் குழந்தை காணவில்லை என்று தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
உசேனா பானு என்பவர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது 3 வயது ஆண் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்த போது குழந்தை உட்கார வைத்திருந்த இடத்தில் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உசேனா பானு, போலீசாரிடம் ஆசிக் என்ற தனது மகன் காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து குழந்தை எப்படி மாயமானது யார் காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் 3 வயது ஆண் குழந்தை காணாமல் போனது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போவது தமிழகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.