3 வயதுக் குழந்தை பாலியல் பலாத்காரம் - தருமபுரி இளைஞர் கைது!
தர்மபுரி: தர்மபுரி, காரிமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம், சென்னம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 3 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்தது.

அவரது தாய் அருகில் உள்ள உறவினர் வீட்டில் பூ கட்டிக்கொண்டிருந்தார். அப்போது குழந்தை அலறல் கேட்கவே அவரது தாய் வீட்டுக்கு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது அவரை தள்ளி விட்டுவிட்டு வாலிபர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை பார்த்த போது குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாய் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, தப்பி ஓடிய வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அந்த வாலிபர் அதே ஊரை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் மணிகண்டன் என்பது தெரியவந்து பொதுமக்கள் காரிமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு மற்றும் போலீஸார் மணிகண்டனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications