அண்ணாநகர் திமுக வேட்பாளர் உருவம் பொறித்த 3000 டீ கப் பறிமுதல்! பறக்கும்படை அதிரடி
சென்னை: அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் உருவம் பொறித்த 3 ஆயிரம் தேனீர் கோப்பைகளை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆற்காடு வீராசாமி தனது மகனுக்கு ஒதுக்க வலியுறுத்திய, சென்னை அண்ணாநகர் தொகுதி, ஸ்டாலினுக்கு நெருக்கமான தொழிலதிபர் எம்.கே.மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரை எதிர்த்து அதிமுகவில் மோதுபவர் அமைச்சர் கோகுல இந்திரா. எனவே இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்து பெற்றுள்ளது.
வாக்குகளுக்கு பணம் தருவதாக, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள். இந்நிலையில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று, நடுவங்கரை பககுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது திமுக வேட்பாளர் மோகன், உருவம் பொறித்த தேனீர் கோப்பைகள் ஒரு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மொத்தம் 3 ஆயிரம் டீ கோப்பைகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கோப்பைக்குள், தலா ரூ.1000 வைத்து, வாக்காளர்களுக்கு வழங்க திமுக தரப்பு திட்டமிட்டிருந்ததாக அதிமுக புகார் கூறியுள்ளது.