தேர்தல் தோல்வி.. உள்குத்து.. கோஷ்டி மோதல்.. 33 திமுகவினர் சஸ்பெண்ட் பின்னணி!
சென்னை: திமுகவிலிருந்து 33 முக்கியமான நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொம்ப லேட்டான நடவடிக்கை என்று இது பார்க்கப்பட்டாலும் கூட இப்போதாவது களை எடுக்க ஆரம்பித்துள்ளதே திமுக என்று திமுக விசுவாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
இந்த 33 பேரும் சஸ்பெண்ட் ஆக முக்கியக் காரணம் உள் குத்துக்கள் மற்றும் கோஷ்டிப் பூசலே காரணம் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து இந்த 33 பேரையும் தூக்கியுள்ளது திமுக மேலிடம்.

வெற்றி பெறவில்லை
லோக்சபா தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்டது திமுக. ஆனால் எதிலுமே வெற்றி பெறவில்லை. பல தொகுதிகளில் 3வது இடத்தைக் கூட பிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

கோஷ்டிப் பூசல்
பிற கட்சிகளைப் போலவே திமுகவிலும் கூட கோஷ்டிப் பூசல் இருக்கிறது. அழகிரி கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி என்று. இதில் அழகிரி கோஷ்டியை கஷ்டப்பட்டு களையெடுத்து விட்டனர். அழகிரி இல்லாத நிலையில்தான் லோக்சபா தேர்தலையும் திமுக சந்தித்தது.

எதிர்பாராத வகையில்
ஆனால் எதிர்பாராத வகையில் எங்குமே திமுகவுக்கு வெற்றி கிடைக்காமல் போனதால் அது அதிர்ந்து போனது. இதையடுத்து கட்சியில் முழுமையான களையெடுப்பு அவசியம் என்பதையும் உணர்ந்தது.

முதல் கட்டமாக
முதல் கட்டமாக கட்சியின் மாவட்டச் செயலாளரக்ள் சீர்திருத்தியமைக்கப்பட்டனர். மாவட்டங்களும் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த்தாக 33 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இதில் சில முக்கியமான தலைகளையும் உருட்டியுள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளடி வேலை
நீக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்தலின்போது உள்ளடி வேலை செய்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காகவும் பாடுபடாதவர்களையும் கட்சி மேலிடம் தூக்கியுள்ளது.

பழனிமாணிக்கம்
முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் இதில் முக்கியமானவர். இவர் தேர்தலில் சீட் கேட்டு அந்தப் போட்டியில் டி.ஆர்.பாலுவிடம் தோற்றவர். இதனால் வெளிப்படையாகவே அதிருப்தியுடன் காணப்பட்டார்.

டி.ஆர்.பாலு சமாதானப்படுத்தியும் கூட
டி.ஆர்.பாலு இவரை சமாதானப்படுத்தியும் கூட தேர்தல் பணியில் இவர் ஈடுபாடு காட்டவில்லை. மேலும் பாலுவுக்கு எதிராகவும் ரகசியமாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

கே.பி.ராமலிங்கம்
இதேபோல கே.பி.ராமலிங்கம் வெளிப்படையாகவே அழகிரிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர். இவரை முன்பே நீக்கியிருப்பார்கள். ஆனால் அப்போது அமைதி காத்து விட்டு இப்போது கூட்டத்தோடு கூட்டமாக நீக்கியுள்ளனர்.

முல்லை வேந்தன்
இதேபோல முன்பு திமுகவிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் திரும்பி வந்தவரான தர்மபுரி முல்லை வேந்தன், சர்ச்சைக்குரிய பாப்பாரப்பட்டி சுரேஷ் குமார் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

தயவு தாட்சன்யமின்றி
இத்தோடு நின்று விடாமல் மேலும் பலரையும் தயவு தாட்சன்யமின்றி நீக்கி கட்சியில் கோஷ்டிகளே இல்லாத நிலையை ஏற்படுத்தி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று திமுக விசுவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications